செவ்வாய், 26 ஏப்ரல், 2011

எவ்வளவு அடித்தாலும் வலிக்காத தி.மு.க.....


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக, வெளியே உலாவிக்கொண்டிருந்த, "2 ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு, தமிழக முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. அவரது அருமை மகள் கனிமொழி, கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதுவரை, சாதிக் பாட்ஷா, ராஜா, அவரது சகோதரர் என தி.மு.க., சுற்றுவட்டாரங்களையே சுற்றிவந்த சி.பி.ஐ., இம்முறை, அக்கட்சித் தலைவரின் வீட்டுக்குள்ளேயே புகுந்துவிட்டது. நேரடியாக குற்ற வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார் கனிமொழி. இப்போது என்ன செய்யப்போகிறது தி.மு.க.,? இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், இப்பிரச்னை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அப்படி என்ன முக்கிய முடிவு? என்னுடைய பார்வையில், "கழக எம்.பி., கனிமொழி மீது சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை, சட்டத்தின் துணையோடு சந்திப்போம்' என்பதைத் தவிர, வேறெந்த முடிவையும் தி.மு.க., எடுக்கும் என எதிர்பார்க்க வேண்டாம். "இதற்கு மேல் கருணாநிதி பொறுக்க மாட்டார். நிச்சயம் பொங்கியெழுந்துவிடுவார். அமைச்சரவையிலிருந்து விலகுவார். ஆதரவையாவது வாபஸ் பெறுவார்' என்றெல்லாம், சில நப்பாசைக்காரர்கள் தப்பாசைப்படுவார்கள். ஆனால், அது நடக்கப்போவதில்லை. காரணம் என்னவென்று விளக்குகிறேன்.

கடந்த 2009ல் இவர்கள் கேட்ட எண்ணிக்கையில் அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை; கேட்ட துறைகளும் கிடைக்கவில்லை. "இவ்வளவு தான்; அதுவும், இன்னின்ன துறைகள் தான்' என காங்கிரஸ் தரப்பில் ஒரு பார்முலா அறிமுகப்படுத்தப்பட்டது. அதிர்ந்த தலைவர், "ஆட்சியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்' என ரோசத்தோடு சென்னை திரும்பினார். தி.மு.க., இல்லாமலேயே மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில், மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' அறிவிக்கப்பட்டது. அமைச்சர் ராஜாவின் அலுவலகத்துக்குள் சி.பி.ஐ., புகுந்தது தான் தாமதம், அடுத்த நாளே, கேரளா அரசைக் கண்டித்து என அந்தப் போராட்டம் மாற்றப்பட்டது. இறுதியில், போராட்டமே கைவிடப்பட்டது. கருணாநிதி அதையும் தாங்கினார்.

காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், நூறு முறை தமிழகம் வந்துவிட்டார். ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளும் அதுபற்றி கேள்வி எழுப்பின. கருணாநிதி அதையும் தாங்கினார்.

ராஜா கைது செய்யப்பட்டார். அப்போது கூடிய தி.மு.க., பொதுக்குழு, "சட்டப்படி எதிர்கொள்வோம்' என சம்பிரதாயத்துக்கு ஒரு தீர்மானம் போட்டு முடித்துக்கொண்டது. தி.மு.க., சார்பில் அவருக்கு ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை. 85 நாட்களுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார். "தலித் என்பதால் தான் ராஜா கட்டம் கட்டப்படுகிறார்' என கவலைப்பட்ட கருணாநிதி, அதையும் தாங்கினார்.

சமீபத்தில் முடிந்த சட்டசபைத் தேர்தலில், "63 சீட் வேண்டும்; அதுவும், நாங்கள் கேட்கிற தொகுதி தான் வேண்டும்' என, இதுவரை எந்தக் கூட்டணியிலும், எந்தக் கட்சியும் விதித்திராத நிபந்தனையை காங்கிரஸ் விதித்தது. "இது நியாயமா?' என பக்கம் பக்கமாக அறிக்கை விட்ட கருணாநிதி, "தி.மு.க., மத்திய அமைச்சர்கள் ராஜினாமா' என அறிவித்தார். யாரும் கெஞ்சாமலேயே, ராஜினாமா முடிவை மாற்றிக்கொண்டார். அனைத்து ஊடகங்களும் கேலி செய்தன. அதையும் தாங்கினார் கருணாநிதி.

தமிழக சட்டசபைத் தேர்தலில், வரலாறு காணாத அளவு கெடுபிடியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. நான் முந்தைய பதிவிலேயே சொன்ன மாதிரி, காங்கிரசின் கண்ணசைவு இல்லாமல், இவ்வளவு கெடுபிடி சாத்தியமில்லை. கருணாநிதியும் உணர்ந்திருந்ததால் தான் அதை, "எமர்ஜென்சி'யோடு ஒப்பிட்டார். அந்த அளவுக்கு தி.மு.க.,வின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது தேர்தல் கமிஷன். அதையும் தாங்கினார் கருணாநிதி. 
இரண்டு நாட்கள் முன்பு கூட தலைமைச் செயலத்தில் ஒரு பெண் நிருபர், "கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவீர்களா?' எனக் கேட்க, "ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, இப்படி இதயத்தை தூக்கியெறிந்துவிட்டு கேள்வி கேட்கலாமா' என, பதில் கேள்வி கேட்டார். இதற்கு என்ன அர்த்தம்? மேற்சொன்ன அத்தனையையும் தாங்கிய முதல்வர் கருணாநிதி, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகையையும், ஒருவேளை அவர் கைதானால், அதையும் கூட தாங்குவார் என்பது தான், அதன் அர்த்தம். ஏனெனில், அவருடையது, எதையும் தாங்கும் இதயம்.

வியாழன், 14 ஏப்ரல், 2011

ஐந்து முறை தமிழக முதல்வராக.....

ஐந்து முறை தமிழக முதல்வராகவும், மூன்று முறை, மத்திய பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலும் அங்கம் வகித்த கருணாநிதி, தன் ஆட்சியில், தமிழகத்தின் முக்கிய ஜீவாதாரப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றுக்காவது, நிரந்தர தீர்வைக் கண்டாரா? நாற்பது லட்சம் விவசாயிகளின் வாழ் வாதாரமான அகன்ற காவிரி, நதிநீர் பிரச்னையால் இன்று வறண்ட காவிரியானது. ஒவ்வொறு ஆண்டும், ஜூன் 12ம் தேதி, விவசாயத்திற்காக திறக்கப்பட்ட மேட்டூர் அணை, கடந்த பல ஆண்டுகளாக, அத்தேதியில் திறக்கப்படவில்லை. அடுத்து, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, பாம்பனாறு; ஆந்திராவுடன் பாலாற்றில் பிரச்னை. இலங்கை கடற்படையினர், நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்தி, கொன்று, வலைகளை அறுத்து, கடலில் வீசி அட்டகாசம் செய்கின்றனர். அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் விலைவாசி பற்றி சொல்லவே தேவையில்லை. இவ்வாறு, தமிழகத்தின் அனைத்து தரப்பினரும், ஏதாவது ஒரு வகையில், தி.மு.க., ஆட்சியால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் ஏதாவது ஒரு பிரச்னையைத் தீர்க்க, சம்பந்தப்பட்ட மற்றும் மாநில முதல்வர்களுடன் பேசி, தீர்வு ஏற்பட, முதல்வர் கருணாநிதி முயற்சி செய்ததுண்டா? "உளியின் ஓசை, இளைஞன், பொன்னர் சங்கர்' என, திரைபடங்களுக்கு கதை வசனம் எழுதுவதற்கே, இவருக்கு நேரம் போதவில்லை. தன் குடும்ப வாரிசுகளுக்கு, மத்தியில் பதவி கிடைக்க, நாள் கணக்கில் டில்லியில் முகாமிட்டுப் பெற்றது தான் இவரது சாதனை! கடந்த ஐந்து ஆண்டுகளில், மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும், எத்தனை மாதங்களில் அல்லது ஆண்டுகளில் இந்த மின்வெட்டு சரியாகும் போன்ற எந்த விவரமும் தெரியாத ஒரு மின்துறை அமைச்சர் இருக்கிறார் என்றால், அது தமிழக மின்சார அமைச்சர், ஆற்காடு வீராசாமி தான்! இவ்வாறு, தமிழகத்தை, இலவசங்களிலும், இருளிலும், சாராயத்திலும் மூழ்கடித்துவிட்டு, தன் குடும்பத்தை மட்டும், அம்பானிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளார் கருணாநிதி!

"லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'....

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.
பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.

* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரே....


அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

  17/29  

அண்ணா ஹசாரே

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…

கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும்  இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?
நேரடிச் செய்தி ஒளிபரப்புகளில் மெழுகுவர்த்தியும் கையுமாகத் தோன்றும் ஊழல் ஒழிப்புப் ‘போராட்டக்காரர்கள்’, இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லையென்கிறார்கள். இப்போது விட்டால் இனியெப்போதும் ஊழலை ஒழிக்கும் சந்தர்ப்பம் அமையாது என்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பேட்டியளித்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ‘போராட்டக்காரர்’ ஒருவர், “இன்று காலை எங்க வீட்ல வேலை பார்க்கும் பெண்மணியிடம் கேட்டேன். அவருக்கு லோக்பால்  என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னவொரு அநியாயம்? இப்படியும் அறிவில்லாத மக்கள் நாட்டில் வாழ்கிறார்களே? அதனால் தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்து போராடிவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்” என்கிறார். இதைப் போன்ற ‘இலட்சிய வெறியுடன்’ பெருந்திரளான ‘மக்கள்’ நாடெங்கும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கொண்டாட்டம் குறைந்துவிடவில்லை.
டைம்ஸ் நௌ சேனலில் தோன்றிய ஷோபா டே, தனது லிப்ஸ்டிக் கலைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் சத்தியாவேசம் பொங்க ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் போட்டுக் காய்ச்சியெடுத்து விட்டார். பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிக்கு ஆதரவளித்ததைப் போலவே இப்போதும் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், பல்வேறு இந்தி நடிகர்களும் ஊழலை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவதாக சபதம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வருகின்றன. இதில் உச்சகட்ட பரபரப்பான செய்தியென்னவென்றால், காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.
ஏதோ இந்தியா முழுவதும் படுபயங்கரமான மக்கள் கிளர்ச்சி நடந்து வருவதைப் போன்ற இந்த சித்தரிப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தான் ஆரம்பித்தது. அன்று தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு பக்கம் பகத்சிங் தோழர்களும் அதற்கு எதிர்புறம் அவர்களைப் பார்த்து பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும் காந்தியும் பிரிண்ட் அடிக்கப்பட்ட பெரிய ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்ட மேடையில், பின்னணியில் காந்தி பஜனைப் பாடல்கள் ஒலிக்க, காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு தனது உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு, ஆங்கில இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்  பரபரப்பான விவாதப் பொருளாகி, தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு பெருநகரங்களில் இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது. உச்சகட்டமாக, வரும் ஞாயிற்றுக் கிழமையை மஞ்சள் டி-சர்ட், மஞ்சள் தொப்பி சகிதம் ஒரு ‘மஞ்சள் ஞாயிறாக’ கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஏன் ஞாயிற்றுக் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குக் கொள்கை விளக்கமாக ‘அது ஒரு விடுமுறை நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
ஊடகங்களின் கேமரா வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும் முன், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் கோரும் சீர்திருத்தங்கள் – லோக்பால் மசோதாவின் பின்னணி!

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மீக பிரபலங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் என்.ஜி. ஓ அமைப்பின் சார்பாக, அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரன் பெடி, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் போன்றோரால், ஜன் லோக்பால் என்கிற மசோதாவின் முன்வரைவு ஒன்றைத் தயாரித்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.
அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவின் படி உண்டாக்கப்படும் ஊழல் தடுப்பு அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மேலும், புகார்கள் ஏதும் இல்லாத நிலையிலும் ஒரு விவகாரம் பற்றி சுயேச்சையாக விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை. மட்டுமல்லாமல், புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் கிடையாது; மக்களவை சபாநாயகரோ மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் அளவிற்குத் தான் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.
ஊழலுக்கு எதிரான இந்தியா முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மேற்படி மசோதா முன்வரைவைத் தயாரித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினர், இதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்களாம். இதற்குப் பேசாமல் அந்தக் கடிதங்களை அவர்கள் நேரடியாக ஒபாமாவுக்கே அனுப்பியிருக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்காவது அனுப்பியிருக்கலாம். சாமியை விட்டுப் பூசாரியிடம் வரம் கேட்டுக் கெஞ்சி இருக்கிறார்கள். போகட்டும்.

மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியே பேர் போன திருடனாக இருந்தது சமீபத்தில் தான் அம்பலமானது. அது ஊரெல்லாம் தெரிந்து, சகலரும் காறித் துப்பிய பின்னரும் ‘அப்டியா எனுக்கு ஒன்னியுமே தெரியாதே’ என்று விளக்கம் அளித்த நெம்ப நல்லவர் தான் பிரதமர். அப்போது மட்டுமா? இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஊழல் உள்ளிட்டு ஒவ்வொரு முறை முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அம்பலமாகிய போது சலிக்காமல் அவர் அளிக்கும் விளக்கம் ‘தெரியாது’ தான். அந்தக் கல்லுளிமங்கனுக்குத் தான் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். மவுனமோகனின் மற்ற அரசியல் நடவடிக்கைகள் குறித்து அண்ணா ஹசாரேவுக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எதிர்பார்த்தது ஊழல் குறித்த ஆலோசனைக்கு ஒரு பதில்தான். ஆனால் அவர் எதிர்பார்த்திற்கும் மேலான பதில்கள் பலரிடமிருந்தும் படையெடுத்து வருகின்றன.
இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், நாடெங்கும் போராடும் மக்கள் மேல் பாய்ந்து குதறும் அரசு, அண்ணா ஹசாரேவிடம் பொறுமையாகப் பதிலளிக்கிறது. ஒன்றுமே தெரியாத பிரதமரே கூட முன்வந்து அண்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்று பரிவோடு பேசுகிறார். பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றனர். பிரதமரின் பரிவு, சோனியாவின் ஆதரவு, எதிர்கட்சிகளின் ஆதரவு – இதற்கெல்லாம் மணிமகுடமாக – இத்தனை பேரின் ஆதரவோடு சேர்த்து பீகாரின் மு.க அழகிரியான பப்புயாதவின் ஆதரவையும் அண்ணா ஹசாரே பெற்றுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பப்பு யாதவ், அண்ணாவுக்கு ஆதரவாகத் தாமும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கிரிமினலைக்கூட ஒரு காந்தியவாதி திருத்திவிட்டார் என்றும் நீங்கள் கருதிக் கொள்ளலாம்.
தற்போது ஊடகங்களில் போராட்டக்காரர்களாகவும் புரட்சிக்காரர்களாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் நபர்கள் யாரும் அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அல்ல. இவர்கள் தமது சொந்த வாழ்க்கையின் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, சொகுசான வேலைகளில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் கொஞ்சம் சமூக உணர்வு வந்திருப்பதாக கருதிக் கொள்பவர்கள். சிலர் கேமராமுன் பேட்டியளித்த போது வெவ்வேறு பாலிஷான வார்த்தைகளில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கவும் இல்லை. இதே அண்ணா ஹசாரே ஒரு பத்து நாளைக்கு முன் – கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த சமயத்தில் – தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால் ஜந்தர் மந்தரில் ஒரு குஞ்சு குளுவான் கூட கூடியிருக்காது என்பது தான் நிதர்சனம்.
இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆங்கில செய்திச் சேனல்களின் கேமாராக்களின் முன் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் மத்திய இந்தியாவில் இந்தியாவின் அரிய வளங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு படையலிட்ட போதும் அதை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போதும், அந்தப் போராட்டத்தின் மேல் இரத்த வெறியோடு இராணுவம் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அப்போது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் மத்திய அரசு தனது மிருகத்தனமான ஒடுக்குமுறையை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் கட்டவிழ்த்து விட்ட போதும் அதை எதிர்த்து சாமானிய மக்கள் போராடிய போதும் பாப்கார்னைக் கொறித்துக் கொண்டும் கோக்கை அருந்திக் கொண்டும் ஆதரித்தவர்கள்.
அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாம் நாளிலேயே அவரின் கோரிக்கைகளில் ஒன்றான லோக்பால் மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது. காங்கிரசு பார்க்காத கமிட்டியா? இந்த லோக்பால் மசோதாவும் கூட நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பல்வேறு கமிட்டிகளில் தான் மூழ்கிக் கிடந்தது. இத்தனை நாளும் குட்டையில் முங்கிக் கிடந்த லோக்பால் மசோதாவைத் தூக்கிக் குளத்தில் போடப் போகிறார்கள்.  அநேகமாக இன்னும் இரண்டொரு நாளில் கமிட்டித் தலைவர் யாரென்பதை முடிவு செய்து விட்டு ஊழல் எதிர்ப்புப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடும். அதற்கு மேலும் இதை நீட்டித்தால் ‘போராட்டக்காரர்கள்’ உற்சாகத்தை இழக்கவும் கூடும். இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எந்த வரம்பிற்குள் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அண்ணா ஹசாரேவுக்கு தெரியாமல் போனாலும் ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.
ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களின் இந்தப் போராட்ட வழிமுறையே உண்ணாவிரதம் என்ற அரதப்பழசான ஆபத்தில்லாத முறையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு இப்போது வேறு சில கேள்விகள் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட அரசு இதை மட்டும் பரிவோடு பார்ப்பது ஏன்? எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராடும் மக்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரித்துப் பழக்கப்பட்ட கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? உண்மையில் இவர்கள் எதிர்த்துப் போராடப் போவதாகச் சொல்வது ஊழலைத் தானா?

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது?

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.
நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.
தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.
அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.
இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.
தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.
அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்

இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?
தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.
ஒருவேளை இந்தக் கமிட்டியின்  மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு  உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.
அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்.  நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.
வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது? ...


தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.
நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.
தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.
அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.
இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.
தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.
அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சகாயம் செய்த சகாயம்-4

கிராமத்தில் தங்குவோமும் உழவர் உணவகமும்

மாவட்ட ஆட்சியராக இருப்பவர் மாவட்ட நிர்வாகத்தை மட்டும் கவனிப்பவர் அல்ல,  சில திட்டங்களைத் தீட்டுவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது என்பதைச் செயலில் காட்டியவர் சகாயம்.  இருக்கிற இடம் தெரியாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் காலத்தைக் கழிக்கும் சராசரி ஆட்சியர் அல்ல அவர். மக்களோடு மக்களாகக் கலந்து பழகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தியவர். அப்படி அவர் தீட்டிய திட்டங்கள் பல. அதில் முதலாவது ’மாதம் ஒரு கிராமம்’ என முதலில் தொடங்கப்பட்டுப் பின் ‘கிராமத்தில் தங்குவோம்’ எனப் பெயர் மாற்றம் பெற்ற திட்டம்.

மாவட்ட ஆட்சியரும் நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் சார்ந்த உயரதிகாரிகளும் என இருபதிலிருந்து முப்பது பேர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் ஒன்றிற்குச் சென்று ஓரிரவு முழுவதும் அக்கிராம மக்களின் குறைகளைக் கேட்டு  உடனடியாக அவற்றைத் தீர்த்து வைக்கும் திட்டம் இது. அதிகார மையங்களை நாடி வந்து மக்கள் அலைக்கழிவதை அன்றாடம் காண்கிறோம். அதற்கு எதிராக அதிகாரமே மக்களைத் தேடிச் செல்லும் வகையிலான திட்டம் இது. இது புதிய பலன்களை மக்களுக்குத் தரும் நலத்திட்டம் அல்ல. ஏற்கனவே அரசு கொண்டு வந்திருக்கும் நலத் திட்டங்களின்  பலன்களை முழுமையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்  உத்தி வகுப்புத் திட்டம். இத்திட்டத்தின்படி மாதம் ஒரு கிராமம் என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மாவட்ட நிர்வாகமே போய்த் தங்கியது.

அக்கிராமத்தில் உள்ள முதியோர்களில் உதவித்தொகை பெறத் தகுதியானவர்கள் இருந்தால் அங்கேயே விசாரித்து உடனடியாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. வீடு, நிலங்களுக்குப் பட்டா வேண்டுபவர்களுக்கு அங்கேயே வழங்கப்பட்டது. திருமண உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து நலத்திட்டப் பயன்களும் அப்போதே அக்கிராம மக்களுக்குக் கிடைத்தன. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த ஊர்ப் பொதுப் பிரச்சினைகளையும் நிலத் தகராறு உள்ளிட்ட தனிநபர் பிரச்சினைகளையும் ஆட்சியர் தலைமையிலான குழு பேசிச் சுமுகமாகத் தீர்த்து வைத்தது.

உண்மையில் ஆட்சியர் தம் ஊரில் வந்து தங்க மாட்டாரா என நாமக்கல் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வகையில் மிக வெற்றிகரமாக நிறைவேறிய திட்டம் இது. மக்கள் பிரதிநிதிகளாக வாக்கு வாங்கித் தேர்வாகிச் செல்லும் அரசியல்வாதிகள் தம் தொகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களையேனும் அறிந்து வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் சகாயம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லா ஊர்களையும் தெரிந்து வைத்திருந்தார். இத்திட்டத்தில் சில மலைக் கிராமங்களுக்குப் பல கல் தொலைவு நடந்தே சென்றிருக்கிறார் சகாயம். பேருடல் கொண்ட சில அதிகாரிகள்தான் அவருடன் நடந்து வரச் சிரமப்பட்டனர். மலை கிராமங்கள் சகாயத்தின் வருகையால் போக்குவரத்து வசதிகளையும் மின் இணைப்புகளையும் பெற்றன.

முப்பது பேருக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரு கிராமத்திற்குச் சென்றால் கார்கள், ஜீப்கள் என அரசு வாகனங்கள் பலவற்றைப் பயன்படுத்த வேண்டி நேரும். அது அதிக செலவு எனக் கருதி போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஆட்சியர் உட்பட அனைவரும் செல்லுதல் என்னும் நடைமுறையைக் கொண்டு வந்தார். தம் வீட்டிலிருந்தே இரவுச் சாப்பாட்டை எடுத்துச் செல்வதும் சகாயத்தின் வழக்கம்.  நலத் திட்டங்களின் பலன்கள் மக்களுக்குச் சேரும் வகையில் சகாயம் செயல்பட்டதால்  ‘அவர் திமுகவுக்குச் சாதகமானவர்’ என்னும் பேச்சு ஒன்றும் கிளம்பியது. அவரது தமிழுணர்வும் திமுகவோடு இணைக்க வசதியாக இருந்தது.  அவர் மக்களைச் சார்ந்தவர் என்று சொல்வதுதான் பொருத்தம். நலத் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் சகாயம் செய்ததால் திமுக அரசுக்குத்தான் லாபம்.  இந்தத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு  வெற்றி கிடைக்குமானால் அதில் சகாயத்தின் பங்கும் கணிசமானது என்றே சொல்வேன்.

தம் அதிகார வரம்பிற்கு உட்பட்டுச் சில மக்கள் நலத் திட்டங்களையும் சகாயம் உருவாக்கினார். அதில் மிக முக்கியமானது ‘உழவர் உணவகம்’ என்னும் அற்புதமான திட்டம். அவர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அத்திட்டம் தொடங்கப்பட்டது. விடிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிக் காலை ஒன்பது மணி வரை செயல்படும் உழவர் சந்தைகள் அதன்பின் மறுநாள் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் சும்மாதான் கிடக்கின்றன. உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் இதன் மாலை நேரத்தை மாற்றினால் என்ன என்னும் சகாயத்தின் சிந்தனை விளைவே  உழவர் உணவகம்.

வேளாண்மைத் துறை மூலமாக இந்த ஏற்பாட்டைச் செயல்படுத்தினார் சகாயம். உள்ளூரின் மரபு உணவுகளை எல்லாம் தயாரித்து ஒருநாள் மாலையில் காட்சியும் விற்பனையும் எனத் தொடங்கப்பட்டது இது. ஐந்து நட்சத்திர உணவகங்களில் நடைபெறும் உணவுத் திருவிழாக்களை விட மிகவும் உற்சாகமாக இது நடந்தது. தமிழக வேளாண் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என யாருக்கும் தெரியாது. மிகவும் சோம்பிக் கிடக்கும் துறை இது. ஆனால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு நிதியைத் தனக்கு ஒதுக்கிக்கொள்ளும் திறன் பெற்ற துறை. அந்தத் துறையைச் சுறுசுறுப்பாக்கினார் சகாயம்.

அத்துறையில் பணியாற்றும் என் உறவினர் ஒருவர் என்னிடம் ‘கும்மாயம்னு ஒரு பலகாரம் இருக்குதாமே. அதத் தயாரிச்சுக் கண்காட்சியில வெக்கச் சொல்றாரு கலெக்டரு. உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார். அந்தப் பலகாரம் குறித்து உ.வே.சாமிநாதையர் ஒரு கட்டுரையே எழுதி உள்ளார். மணிமேகலையில் வரும் ‘பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம் இயற்றி’ என்னும் அடியில் கும்மாயம் என்பதற்குப் பொருள் தெரியவில்லை. நீலகேசி முதலிய நூல்களில் கும்மாயம் வந்தாலும் எதிலிருந்தும் அதன் பொருளைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.  கும்பகோணம் பெருமாள் கோயிலில் நிவேதனமாகக் கும்மாயம் படைக்கப்படுவதை அறியும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு நேர்கிறது.  அதைச் சுவையாக விவரிக்கும் கட்டுரை அது.

அக்கட்டுரையின் இறுதியில் ‘பச்சைப் பயிறும் சர்க்கரையும் கலந்து செய்யும்  சிற்றுண்டி’ எனப் பொருள்படும் வகையில் அவர் குறிப்பு எழுதியிருப்பார். கொங்குப் பகுதியில் ‘சொய்யான்’ என்று சொல்வார்கள். பச்சைப் பயிறு அல்லது கடலைப் பருப்புடன் வெல்லமோ கருப்பட்டியோ கலந்து உருண்டை பிடித்து அதை அரிசிமாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு எடுக்க வேண்டும். இதை என் உறவினரிடம் சொன்னேன். உழவர் உணவகக் கண்காட்சியில் ‘சொய்யான்’ என்னும் கும்மாயமும் இடம்பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட பெரும் மகிழ்ச்சி ‘கும்மாயம்’ என்பதை ஆட்சியர் அறிந்திருக்கிறாரே என்பதுதான்.

உணவுத் திருவிழாவின் நோக்கம் அடுத்த நாள் முதல் தொடங்கும் உழவர் உணவகத்தை அறிமுகப்படுத்துவதுதான். காலையில் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்கும் உழவர்களில் யாருக்கு நேரமும் ஆர்வமும் இருக்கிறதோ அவர்கள் மரபான உணவுவகைகளைச் செய்து வந்து உழவர் உணவகத்தில் விற்பனை செய்யலாம். ‘விவசாயிகளை வியாபாரிகளாக்குவோம்’ என இத்திட்டத்திற்கு முழக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இத்தகைய முழக்கங்களை உருவாக்கி மக்கள் மனதில் பதிய வைப்பதும் சகாயத்தின் உத்தி. ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்பது அவர் அலுவலக வாசகம்.

விவசாயிகளின் மிக முக்கியமான பிரச்சினை இடைத்தரகர்கள்தான். விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் விலைக்கும் விற்பனை விலைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. விளைபொருளுக்கு மிகுந்த தேவை இருந்து விளைச்சல் குறையும் காலத்தில் விற்பனை விலை அதிகமாக இருக்கும். ஆனால் விவசாயிக்கு வழக்கமான கொள்முதல் விலைதான். விலை குறைவானாலும் அதிகமானாலும் ஆண்டு முழுவதும் ஒரே கொள்முதல் விலை எனப் பேசி வைத்திருப்பர். அதை மீற முடியாது. உழவர் சந்தைகளில் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது.

உழவர் சந்தைத் திட்டமே மிகவும் நல்ல திட்டம்தான். ஆனால் அதிகாரிகள் உழவர்களை நடத்தும் முறைதான் மிகவும் கேவலம். வா, போ என ஒருமையில் பேசுவதும் விலை நிர்ணயத்தில் அடாவடி செய்வதும் வியாபாரிகளை உழவர்கள் என்னும் போர்வையில் உள்ளே விடுவதும் என அங்கே நடக்கும் மோசடிகளைச் சரி செய்தால் அது நல்ல திட்டமாக இருக்கும். உழவர்களை மதிப்போடு நடத்த வேண்டும் என்பதில் சகாயம் கண்டிப்பானவர். ஆகவே அவர் காலத்தில் உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டன. சுய உதவிக் குழுக்கள் சில கடைகளை நடத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். கொல்லிமலை விளைபொருள்களை மலைவாழ் மக்களே கொண்டு வந்து விற்பனை செய்யவும் அங்கே  இடம் ஒதுக்கப்பட்டது. உழவர்களிடம் அதிகாரிகள் அன்பாகவும் அனுசரணையாகவும் நடக்க வேண்டும் எனச் சகாயம் வலியுறுத்தினார். தலைமை எப்படி இருக்கிறதோ அதற்கேற்பவே அடுத்தகட்ட அதிகாரங்கள் இருக்கும் என்பது உண்மை. சகாயம் பாணி பரவலாகக் கடைபிடிக்கப்பட்டது.

அங்கேயே தொடங்கப்பட்ட உழவர் உணவகத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது. விவசாய வேலைகள், ஆடுமாடுகளைக் கவனித்தல் என எந்நேரமும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விவசாயிகள் உழவர் உணவகத்தில் வந்து கடை போடுவார்களா என்னும் கேள்வி இருந்தது. ஆனால் பதினைந்திலிருந்து இருபது கடைகள் உழவர் உணவகத்திற்கு வந்தன.  உணவகம் தொடங்கப்பட்ட சமயம் நாமக்கல் மாவட்டத்தில் கடும் வறட்சி. அந்த ஆண்டு மிகக் குறைவான மழையே பெய்திருந்தது. உழவை மட்டுமே நம்பியிருந்தவர்கள்  பாடு பெருங்கஷ்டம். தீவனம் இல்லாமல் ஆடு மாடுகளையும் விற்க வேண்டி நேர்ந்தது. ஆகவே உழவர் உணவகத்தில் கடைபோட ஆட்களைத் தேட வேண்டியிருக்கவில்லை. களி, கம்மஞ்சோறு, தினை உருண்டை, சொய்யான், ஒப்புட்டு, உளுந்தங் கஞ்சி, கொழுக்கட்டை, சோளப் பணியாரம், சோளத் தோசை, சோள அடை, குச்சிக்கிழங்கு உப்புமா, குச்சிக்கிழங்கு வடை, முளைக் கட்டிய பயறுகள் எனப் பல உணவு வகைகள். கூட்டுச்சாறு எனப்படும் அருமையான குழம்புடன் மேலும் பலவகைக் குழம்புகள்.

கொல்லிமலையில் கிடைக்கும் ஒருவகைக் கிழங்கு ஆட்டுக்கால் கிழங்கு என்பதாகும். ஆட்டின் காலைப் போல வடிவம் கொண்ட இக்கிழங்கில் தயாரிக்கும் சூப்பு மருத்துவ குணம் கொண்டது. முழங்கால் வலி, உடல்வலி ஆகியவற்றைப் போக்கும். அந்தச் சூப்பு விற்பனை கொல்லிமலையைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவே உழவர் உணவகத்தில் நடைபெற்றது. பெரிய தேக்குசா நிறையக் கொண்டு வரப்பட்டுச் சூடாகத் தரப்படும் அச்சூப்புக்கு நல்ல வரவேற்பு.

பழங்கள் மூலமாகத் தயாரிக்கும் ஐஸ்கிரீம் கடை ஒன்றும் இருந்தது. சப்போட்டா, கொய்யா ஆகிய விலை குறைந்த பழங்களிலிருந்து சுவையாகத் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் நன்கு விற்பனையானது. அதைத் தயாரிக்கும் பயிற்சிக்கு உழவர் ஒருவர் அனுப்பப்பட்டு அவருக்கு வங்கி நிதி உதவியுடன் எந்திரம் வாங்கிக் கொடுத்து உதவி செய்தவர் சகாயம் அவர்கள். சகாயத்தைப் பற்றிப் பேசினால் அந்த விவசாயி இன்றும் கண்கலங்கிவிடுவார். ‘பாசனத்துக்குத் தண்ணி இல்லாம போயிச் சோத்துக்கே திண்டாட்டம் வந்திருச்சி. குடும்பத்தோட தற்கொல பண்ணிக்கலாம்னு இருந்தம். சகாயந்தான் காப்பாத்துனாரு. அவரு எங்குடும்பத்துக்கே குலதெய்வம்ங்க’ என்பார் அவர்.

மாலையில் ஐந்து மணிக்குத் தொடங்கும் விற்பனை இரவு ஒன்பது மணி வரைக்கும் நடைபெறும்.  வேளாண் துறை அலுவலர் ஒருவருக்குத் தினமும் மாலையில்  உழவர் உணவகத்தில் பொறுப்பு. வாடிக்கையாளர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. உட்கார இருக்கைகளும் சில கயிற்றுக் கட்டில்களும் போடப்பட்டன. உழவர் சந்தை நன்கு சுத்தம் செய்யப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. மக்கள் பலர் ஓய்வாக வந்து கட்டில்களில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பாடுபழமைகள் பேசிப் போயினர். இரண்டு உருண்டை கம்மஞ்சோறு பத்து ரூபாய்தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் தினசரி வாடிக்கையாளர்களாக இருந்தனர். கல்லூரி மாணவர்கள் வடை, சோளப் பணியாரம் சாப்பிட வந்தனர்.  குடும்பமாக வந்து சாப்பிட்டுப் போனவர்கள் அனேகம். ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானம் எனக் கணக்கிட்டுச் செய்திகள் வந்தன.

வாரத்திற்கு ஒருமுறையேனும் சகாயம் மாலை நேரத்தில் தம் குடும்பத்தோடு உழவர் உணவகத்திற்கு வந்துவிடுவார். உணவகச் செயல்பாட்டைக் கண்காணிப்பது மட்டுமல்ல நோக்கம். கட்டிலில் உட்கார்ந்து குடும்பத்தோடு  இரவு உணவை முடித்துச் செல்வார் அவர். அவர் மகன் உழவர் உணவகத்திற்குத் தினமும் செல்ல வேண்டும் என வற்புறுத்துவான் எனவும் சொல்லக் கேள்வி. ஆட்சியர் மிகச் சாதாரணமாக உழவர்களுடனும் மக்களுடனும் பேசிக் கொண்டிருக்கும் காட்சி நமக்கு அபூர்வம்தான். அதை அவர் இயல்பாகச் செய்வார். உண்ணும் பண்டங்களுக்குப் பணம் கொடுக்காமல் ஒருநாளும் சென்றதில்லை அவர்.

இந்த உழவர் உணவகத்தின் வெற்றி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோட்டிலும் உழவர் உணவகம் தொடங்கக் காரணமாயிற்று. ராசிபுரம், பள்ளிபாளையம் முதலிய ஊர்களிலும் தொடங்கத் திட்டம் இருந்தது. சகாயத்தின் இடமாற்றலால் இவை நடைபெறவில்லை. சகாயம் இடமாற்றம் செய்யப்பட்ட பின் இன்றும் உழவர் உணவகம் நடைபெற்று வருகிறது. ஆனால் பெயரளவுக்குத்தான். இடம் சுத்தம் செய்யப்படுவதில்லை. கட்டில்களும் இருக்கைகளும் அகற்றப்பட்டுவிட்டன. கடைகள் பத்துக்குள் எனக் குறைந்துவிட்டன. தினைமாவு போன்ற சில பதார்த்தங்கள் இல்லை. கூட்டம் குறைந்துவிட்டது. உழவர்களைப் பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதற்காக நடத்துகின்றனர்.

அதன் போக்கிலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தானாகவே அழிந்துபோகும் என்னும் தந்திர நடைமுறையை வேளாண் துறை பின்பற்றுகின்றது. இன்னும் எத்தனை நாட்களோ தெரியவில்லை. அதிகாரி ஒருவரின் மூளையில் உதித்த திட்டம் இது. அதனால்தான் இந்த கதி. இதுவே அரசியல்வாதியின் மூளையில் உதித்திருக்குமானால் இந்நேரம் தமிழகம் முழுவதும் உழவர் உணவகம் தொடங்கப்பட்டிருக்கும். தேர்தல் அறிக்கைகளில் உழவர் உணவகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் நாமக்கல் மாவட்ட மக்கள் உழவர் உணவகத்தையும் கிராமத்தில் தங்குவோமையும்  மறக்க மாட்டார்கள். சகாயத்தையும் அவர் ஆட்சியராக இருந்த காலத்தையும்கூட.

உழவர் உணவகம் திட்டம் தொடர்பாக அப்போது மக்களிடம் நிலவிய கதை ஒன்றைச் சொல்லி இதை முடிக்கிறேன். இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பைக் கண்ட வேளாண் துறை அமைச்சர் கோபப்பட்டு ‘என்னைக்கூடக் கேட்காமல் இந்தச் சகாயம் எப்படித் தொடங்கலாம்?’ என்றாராம். முதல்வரிடம் சென்று சகாயம் செயல்படுவது சரியில்லை, அவரை மாற்றுங்கள் என்றும் கேட்டாராம். அதற்கு முதல்வர் ‘சகாயம் சுயேச்சையாத் தேர்தல் நின்னாக்கூட நாமக்கல்ல ஜெயிச்சிருவாரு. அவர இப்ப மாத்துனா மக்கள் கோபம் நம்ம மேல திரும்பீருமய்யா’ என்று பதில் சொன்னாராம்.

அப்பேர்ப்பட்ட ஆட்சியர் சகாயத்தை ஏன் மாற்றினார்கள்?

நேர்மையாளார்களுக்கு பிடித்த சகாயம் ...5


சகாயம்: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி

நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய இருபத்தேழு மாதங்களில் சகாயம் தீட்டிய திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்திய விதமும் தேர்ந்த நிர்வாகி அவர் என்பதையும் நேர்மையும் பொதுநல நோக்கும் உடையவர் என்பதையும் வெளிப்படுத்தின.  அதனால்தான் தன் சொத்து விவரங்களை வெளியிடும் துணிச்சல்  அவருக்கு வந்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுத் திட்டங்கள் அவர்களைச் சென்று சேர விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். அத்தோடு ‘ஊன்றுகோல் திட்டம்’ என்னும் ஒன்றையும் செயல்படுத்தினார். ஆர்வமும் வாய்ப்பும் உள்ள புரவலர்கள் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தத்தெடுத்துக் கொள்ளுதல் என்பதே இத்திட்டம். தத்தெடுக்கப்பட்ட திறனாளிக்கு ஆலோசனைகள் வழங்குதல், வேலைவாய்ப்புக்கு உதவுதல் உள்ளிட்ட அவர் நலன்கள் சார்ந்து அந்தப் புரவலர் இயங்க வேண்டும். சகாயமே அப்படி ஒருவரைத் தத்தெடுத்து முன்னுதாரணமாக விளங்கினார். அவரைப் பின்பற்றியவர்கள் பலர். ஆனால் சகாயம் இடமாற்றம் செய்யப்பட்டபின் அத்திட்டம் அப்படியே கிடப்பிற்குப் போய்விட்டது. ஆட்சியர் தத்தெடுத்தவருக்கு உதவ  அடுத்த ஆட்சியர் தயாராயில்லை. ஒருவர் தொடங்கிய நற்செயல்களை அடுத்தவர் தொடரும் பண்பு தமிழகத்திலேயே கிடையாதே. 

மாவட்ட மக்கள் ஆட்சியரிடம் தம் குறைகளை இணையம் வழியாகத் தெரிவிக்கத் ‘தொடுவானம்’ என்னும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இணையம் மூலம் தெரிவிக்கப்பட்ட புகார்களை உடனடியாக விசாரித்துக் குறை களைய முயன்றார். சமூக உணர்வோடு சிந்திப்பவர்கள் எல்லா நிலைகளிலும் வேறுபட்டவர்களாக இருப்பர் என்பதற்குச் சகாயம் சான்றாவார். சுற்றுச்சூழலிலும் அவர் பெரிதும் அக்கறை காட்டினார். நாமக்கல் மாவட்ட ஏரிகளைத் தூர் வாரிப் பராமரிக்க அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிதி முதலியவற்றைப் பயன்படுத்தினார். ஏரிகளில் சாக்கடை நீரைக் கொண்டு சேர்ப்பது கூடாது எனத் தீவிரமாக இருந்தார். 

நான் வசிக்கும் பகுதியில் அந்தக் கால ஓடை ஒன்றும் அருகில் காலியான மனைகளும் உள்ளன. ஆசிரியர் குடியிருப்புப் பகுதியின் சாக்கடை நீர் முழுக்க இந்த ஓடையில்தான் செல்லும். காலி நிலம் முழுக்கச் சாக்கடை நீர் பரவி நாற்றம். நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டது. கொண்டிசெட்டிபட்டி ஊராட்சிக்கு அவர் வருகை தந்த போது எங்கள் பகுதி மக்கள் கூடி சாக்கடை நீரைக் கொண்டிசெட்டிபட்டி ஏரியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அதைச் சகாயம் மறுத்துவிட்டார். இந்தப் பகுதிக்கே நீராதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கவும் காரணமான ஏரியை மாசுபடுத்த முடியாது. மாற்று வழியைச் சொல்லுங்கள் என்றார். 

அந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார். புதை சாக்கடைத் திட்டம் அப்போது வேலை நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தால் இந்தப் பக்கம் கழிவு நீர் வராது என்றார்கள். சரி, அதுவரை பொறுங்கள், பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார். பிரச்சினையைத் தெரிவித்ததும் இடத்தை விசாரித்து உடனே நேரில் பார்வையிட அவர் வந்ததிலேயே மக்கள் திருப்தி அடைந்தார்கள். கொண்டிசெட்டிபட்டி ஏரியின் பயனை அவர் சொற்கள் மூலமே பலரும் அறிந்தார்கள் என்பது என் அனுமானம். ஏனென்றால் படித்தவர்களுக்கு எப்போதுமே தம் நலம் ஒன்றே குறிக்கோள். தலையை அக்கம்பக்கம் திருப்பவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. 

அந்த ஏரி இப்போதும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. நூறு நாள் வேலைத் திட்டம் இந்தப் பகுதியில் அந்த ஏரிக்குள்தான் செயல்படுகிறது. ஏரிக்குள் வளரும் புற்களை வெட்டி எடுப்பதுதான் நூறு நாள் வேலை. வெட்டி வேலைதான். வளரும் முட்களையும் புதர்ச் செடிகளையும் ஆண்டுக்கு ஓரிரு முறை சுத்தம் செய்தால் போதும். ஆனால் நூறு நாட்களுக்கு வேலை செய்த கணக்கு வேண்டுமே. ஏரியை ஒட்டி டாஸ்மாக் கடை வந்துவிட்டது. குடிமகன்கள் போடும் குப்பைகள் முழுக்க ஏரிக்கரையில் குவிந்து கிடக்கின்றன. அதைத் தடுப்பாருமில்லை. அதை அள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தில் வழியுமில்லை போல. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் ஏரி நிரம்பி நீர் கடை போயிற்று. ஏரி நிரம்பும் என்பதை அப்போதுதான் பலர் நம்பினார்கள். ஏரியை ஒட்டிய நிலத்தில் இப்போது மனைகள் பிரிக்கும் வேலை வேகமாக நடைபெறுகிறது. குடியிருப்புகள் வந்துவிட்டால் ஏரி காலியாகிவிடும். என்ன செய்வது? சகாயம் போன்ற உணர்வு யாருக்கும் இல்லையே. 

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் எனத் திட்டம் தொடங்கி ‘கட்டிடங்களுக்கு நடுவே கானகம்’ எனப் பெயர் சூட்டினார் சகாயம். பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்திருக்கும் சில நூறு ஏக்கர் பரப்பில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவர்கள் அதில் பங்கேற்றார்கள். மரம் வளர்வதற்கு  வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கெல்லாம் கன்றுகள் நடப்பட்டன. சகாயம் இருந்த காலத்தில் சில லட்சம் அளவுக்குக் கன்று நடும் வேலை நடந்தது. இப்போது அத்திட்டம் செயல்படவில்லை. அவர் நட்ட மரக்கன்றுகளையும் காணவில்லை. நீர் ஊற்றிப் பராமரிக்க ஆள் இல்லை. 

மழைக்காலத்தில் நட்டால் தானாகவே தழைந்து விடும். ஒரு கோடிக் கன்றுகளில் ஒரு லட்சமாவது தப்பித்துக்கொள்ளும் என்பது சகாயத்தின் நோக்கமாக இருந்திருக்கும். அவர் இருந்திருந்தால் அவற்றைக் காப்பாற்றவும் ஏற்பாடுகள் செய்திருக்கக் கூடும். நான் பணியாற்றும் கல்லூரிக்கு அருகே நூற்றுக் கணக்கில் நடப்பட்ட கன்றுகளில் எதுவும் இன்று இல்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கல்லூரி. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணியாளர்களும் புழங்கும் இடம். அருகில் ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் பெரிய கிராமமும் உள்ளது. இருந்தென்ன? சில கன்றுகளைக்கூடக் காப்பாற்றும் உணர்வு யாருக்கும் வரவில்லை. நடப்பட்ட கன்றுகளைப் பிடுங்கி ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடிய மாணவக் கண்மணிகளைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சூழலில் வெறும் பார்வையாளனாக இருக்க நேரும்  கையாலாகாத்தனத்தை நொந்து கொள்வதுதான் என்னால் முடிந்தது. 

முதியோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது இந்தியாவில் எங்கும் நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. சகாயம் சந்தித்த சில முதியோர்களின் நிலை அவரை இந்தச் சட்டத்தைக் கையிலெடுக்கத் தூண்டியிருக்கக்கூடும். இச்சட்டத்தைச் சொல்லிப் பயமுறுத்திப் பெற்றோரைக் கவனிப்பது கட்டாயம் என மகன்களுக்கு உணர்த்திய பல சம்பவங்கள் இங்குண்டு. மாதத்திற்கு மகன்களின் வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டுப் பெற்றோருக்கு இவ்வளவு தரவேண்டும் என ஆணையிட்டார். கவனிப்பாரற்றுக் கிடந்த முதியோர்கள் சகாயத்தை வாழ்த்தினர். நடுத்தர வயது மகன்கள் சகாயத்தை எதிரி போலப் பார்த்தனர். ‘இந்தக் கிழடுங்க பண்ற அக்குருமத்த ஆரு கேக்கறது? எதுனா ஒரு வார்த்த சொல்லீட்டா ஒடனே சகாயத்தப் பாக்கப் போறம்னு கெளம்பீருதுங்க’ என்று கோபம் கொண்டு பேசிய மகன்கள் பலருண்டு. எல்லாரும் பாராட்ட வேண்டும் என்பது சகாயத்தின் நோக்கமல்ல. திட்டினாலும் அவருக்குச் சரி என்று தோன்றுவதைச் செயல்படுத்தும் மனதிடம் அவரிடம் உண்டு. 

அவருக்கு மக்கள் ஆதரவு இருந்த அதே நேரத்தில் அதிகாரிகளின் எதிர்ப்பும் பலமாக இருந்தது. குறிப்பாகக் கிராம நிர்வாக அலுவலர்களின் எதிர்ப்பு. நலத் திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்வதற்குக் கிராம நிர்வாக அலுவலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஆனால் எல்லாவற்றையும் பூடகமாக்கியும் சிறு அசைவுக்கும் லஞ்சம் வாங்கியும் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள். அவர்களை நேர்மையாக இருக்கச் சொல்லிக் கண்டித்ததோடு மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்திப் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது என வலியுறுத்தினார் சகாயம். இது எப்படி அவர்களுக்குப் பிடிக்கும்? அரசு திட்டங்களை மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம். ஆட்சியரின் திட்டங்களை நாங்கள் செயல்படுத்த மாட்டோம் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் கொடி பிடித்தனர். மாவட்ட அளவில் மட்டுமல்லாது மாநில அளவிலும் அவர்கள் போராட்டம் நடத்தினர். 

அவர்களை வழிக்குக் கொண்டுவரச் சகாயம் இரண்டு தந்திரங்களைக் கையாண்டார். அரசு விதியைக் காட்டிக் கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லாரும் அவர்கள் பண்யாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும் என்றார். ஒரு கிராம நிர்வாக அலுவலரும் அப்படி வசிப்பவர் அல்ல என்றே நினைக்கிறேன். அப்படி வசித்தால் தங்கள் அதிகாரத்திற்கு மதிப்பிருக்காது என்பது ஒருகாரணம். கிராம வசதிகள் அவர்கள் வசிப்பதற்குப் போதுமானவை அல்ல என்பது மற்றொரு காரணம். சகாயம் இந்த விதியைக் கையிலெடுத்ததும் சகாயத்தை மாற்ற வேண்டும் எனக் கிராம நிர்வாக அலுவலர்கள்  அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். நாமக்கல் மாவட்டத்திலேயே சகாயத்தை மாற்ற வேண்டும் என்று ஒலித்த ஒற்றைக் குரல் அவர்களுடையது மட்டுமே. 

அதற்குக் காரணம் முழுக்க முழுக்கச் சுயநலம்தான். அலுவலகத்தில் இல்லை என்றால் எங்கே போயிருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர் என்பதைக் கரும்பலகையில் கண்டிப்பாக எழுதி வைத்துச் செல்ல வேண்டும் என்னும் விதியை எல்லாம் பின்பற்றச் சொன்னதால் கிராம நிர்வாக அலுவலர்களால் வேலை செய்யாமல் ஏமாற்ற முடியவில்லை. நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருந்தது காரணமல்ல, வேலைகளை நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமலும் செய்ய வேண்டும் எனச் சகாயம் வற்புறுத்தியதுதான் அவருக்கு எதிராக அவர்கள் திரளக் காரணம். அடுத்து கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டங்களுக்கு எதிராக உழவர்களும் சிறுசிறு குழுக்களாக மக்கள் அமைப்புகளும் நடத்திய போராட்டங்களால் அவர்களை எதிர்கொள்ள முயன்றார் சகாயம். சகாயத்தின் மீது பற்றுக் கொண்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்தியவை இப்போராட்டங்கள் என்றும் சகாயமே திட்டமிட்டு அவர்களைத் தூண்டிவிட்டார் எனவும் இரண்டு வகையாகச் சொல்லப்படுகின்றன. அவரே தூண்டியிருந்தாலும் தவறல்ல என்றே நினைக்கிறேன். கிராம நிர்வாக அலுவலர்களோடான முரண்பாடு கடைசிவரை முடிவுக்கு வரவில்லை. அதை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டியது அரசுதான். ஆனால் அரசு இந்த முரண்பாட்டை ரசித்தது, ஊக்குவித்தது. சகாயத்திற்கு ஆதரவாக அரசு தரப்பிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. 

ஊடகங்களோடு சகாயம் நல்ல உறவைக் கொண்டிருந்தார். பத்திரிகைகள் அவர் செயல்களைப் பற்றித் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. அதைப் படிக்க மக்கள் விரும்பினார்கள் என்பதும் அதற்குக் காரணம். ஊடகங்களைச் சமாளிக்கும் அவர் உள்ளூர் அரசியல்வாதிகளை எப்படிச் சமாளிக்கிறார் என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. இத்தகைய அதிகாரிகளை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் சகித்துக்கொள்ளக்கூட அரசியல்வாதிகள் தயாராக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கட்டத்தில் அரசியல்வாதிகளோடு முரண்பாடு வெடித்துப் பெரிதாகும் என நினைத்தேன். 

நல்ல அதிகாரிகளுக்கு நேர்ந்தது அதுதான். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்தியவரும் பின் ஈரோடு மாவட்ட ஆட்சியராகிச் சாயப் பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டவருமான த.உதயச்சந்திரன் அவர்களுக்கு நேர்ந்தது அதுதான். பயிற்சிக்குச் சென்றிருந்த காலத்தில் அவரை ஈரோட்டிலிருந்து மாற்றம் செய்தார்கள். சகாயமும் பயிற்சியில் இருந்தபோது மாற்றப்பட்டார். மாவட்டத்தில் இருக்கும்போது மாற்றியிருந்தால் அவருக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி பெருகும் என்பதைக் கணித்து அரசு அப்படிச் செய்தது. மக்களிடம் அதிகாரிகள் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கருத்தாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள். 

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழகச் சட்டமன்றத் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. அவரோடு ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே சகாயம் மாற்றப்பட்டார். சமத்துவபுர வீடு ஒதுக்கல், சத்துணவுப் பணியாளர் நியமனம் ஆகியவற்றில் சகாயம் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் முரண்பாட்டுக்குக் காரணம். யார் மீதும் எந்த வரையறையும் இன்றிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவார்கள் அரசியல்வாதிகள் என்பதற்கு வி.பி.துரைசாமி நல்ல உதாரணம். பதினான்கு பவர் புரோக்கர்களைக் கைவசம் வைத்துக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தைச் சீர்குலைத்தாராம் சகாயம். ‘கிராமத்தில் தங்குவோம்’ நிகழ்ச்சிக்காக ஐம்பது பேரை அழைத்துக்கொண்டு போய்த் தங்குவதற்குப் புதுவீடு  வேண்டும், ஏசி வேண்டும் எனக் கேட்டாராம் சகாயம். அதனால் முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் சொல்வது தன் கடமை என நினைத்து அதைச் செய்தாராம். 

இந்தக் குற்றச்சாட்டுக்களை நாமக்கல் மாவட்டத்துக் கைக்குழந்தைகூட நம்பாது. அவர் சென்று தங்கிய கிராமத்து மக்களிடம் சென்று விசாரித்தால் தெரியும். ‘அவரு மவராசன்’ என்பார்கள். வாக்குக் கேட்க மட்டுமே கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் அந்த உணர்வுப்பூர்வமான வாழ்த்து எங்கே புரியும்? சகாயத்தின் மாற்றலைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திப் பல அமைப்புகள் போராடின. அப்படிப் போராடியவர்கள்மீது காவல்துறை தடியடி நடத்தியது. வழக்குகள் போட்டுச் சிறையிலடைத்தது. போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவந்து விட்டாலும் சகாயத்தின்மீதான அபிமானத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. 

‘இயற்கையைப் பாதுகாப்போம், லஞ்ச ஊழலை ஒழிப்போம்’ என்பவற்றை முழக்கமாகக் கொண்டிருக்கும் ‘அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு’ ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகளை அச்சிட்டு ராசிபுரம் தொகுதி முழுக்க இப்போது விநியோகித்துக் கொண்டிருக்கிறது. ‘ராசிபுரம் திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமியை தோற்கடிக்க வேண்டும் ஏன்?’ என்னும் தலைப்பிலான அத்துண்டறிக்கை இப்படி முடிகிறது:

 மாவட்ட ஆட்சித் தலைவர் உ.சகாயம் அவர்களை பணிமாற்றம் செய்தும் லஞ்ச ஊழலை எதிர்த்து போராடி வந்த விவசாயிகளை சிறையிலடைத்தும் லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டு  எண்ணற்ற அக்கிரமங்களை செய்து வரும் வி.பி.துரைசாமியை தோற்கடிப்போம்.

இரண்டே கால் ஆண்டுகள் இங்கு ஆட்சியராக இருந்த சகாயம் இங்கிருந்து மாற்றலாகிச் சென்று ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒற்றைச் சக்தியாக இருக்கிறார் என்பது உண்மை.  நாமக்கல் மாவட்டத்தில் திமுக வெற்றி பெறுமானால் அதற்குச் சகாயம் நடைமுறைப்படுத்திய  நலத் திட்டங்களே காரணமாகும். தோல்வி அடையுமானால் சகாயம் என்னும் நேர்மையான அதிகாரி மீது நாமக்கல் மாவட்ட மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பே காரணமாகும்.
                                                                      -------------------

திங்கள், 4 ஏப்ரல், 2011

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் ..

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை.240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று.ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு "மொய்' எழுதிவிடுகிறார்கள். அவர்களும் "அள்ளிக் கொடுக்கும் வள்ளல்' என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள்.தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல?முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் - ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் - ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி.அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான "ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது' என்றோ கூறுவார்களோ என்னவோ...சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும்.ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே "உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?' என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான்.தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!..